ஓர் கணவனின் தவிப்பு
அன்றொரு நாள்
அதிகாலை பொழுது
தலையணை அருகே
அழகாக சிணுங்கியது...
அவளின் அழைப்பை
ஏற்ற என்கைபேசி...
பக்கத்தில் இருந்தும்
பார்க்காமல் தேடினேன்...
கண்விழித்து கண்டேன்
என்னவளின் அன்பு
முகத்தில் புன்னகையின்
புதுபுது அர்த்தங்கள்...
தொடுதிரை தொட்டு
கொஞ்சம் கரகரத்த
குரலில் ஹலோ...
மீண்டும் ஹலோ...
எதிர் முனையில்
மாபெரும் மௌனம்
சிறுது நேரம்
என் குரல்
மட்டுமே ஒலிபரப்பு...
பதில் ஒன்றும் இல்லை...
படுத்திருந்தவன் எழுந்தேன்
தூக்கமதை தொலைத்தேன்
கனவுகள் கலைந்தது
துக்கம் தொண்டையை அடைத்தது...
கைகள் நடுங்கியது
மனதுக்குள் ஏதோ
ஒரு பெரும்
பாரம் கூடிக்கொண்டது...
ஒவ்வொரு அணுவும்
ஓராயிரம் எரிமலையாய்
என்னுள் எக்காளமிட்டு
வெடித்துச் சிதறியது...
சேவலின் சத்தம்
சங்கு சத்தமாய் சூன்னியமானது...
அவளையே சுற்றுது
என் நினைவுகள்...
அது ஏனோ
ஏனோ அது
என் மனம் மட்டும்
துடியாய் துடிக்குது...
சூரியனும் சுடாமல்
மெல்ல வந்தான்
இருளோ வெண்பனி -போல்
விலகி ஓட...
அந்த இருட்டு அறைக்குள்
எனக்கு மட்டும்
அவளின் நினைவுகளோடு
மூன்றாம் உலக
யுத்தம் நிகழ்கிறது...
தேவதையின் குரல்
எங்கே?... எங்கே
அந்த தேவதையின்
இனிய குரல்...
ஐயோ...
என்ன நிகழ்ந்திருக்கும்?...
பூமனம் கொண்டவள்
பூத கரங்களில்
சிக்கி தவிக்கிறாளோ...
உடல் நலத்தில்
ஏதோ நிகழ்த்திருக்குமா?...
இதோ என்
மூச்சு காற்று
சீராக இருக்கிறதே-அது
எப்படி முடியும்...
அவளின் இதயம்
என்னிடம் தானே உள்ளது...
எது என்றாலும்
எனக்குத் தானே
முதல் செய்தி வரும்...
இனியவளின் இனிய
குரல் எங்கே...
ஓ சன்னல் வழி
வரும் தென்றலே...
அவள் விட்ட
மூச்சுக் காற்றை
தொட்டே சுவாசிக்கும்
என் இருதயம்
இன்னும் இருக்கிறதே...
மீண்டும் அழைத்தேன்...
அலைவரிசை வரிசையில்
நிற்கச் சொன்னது...
மீண்டும் அழைத்தேன்...
ஏனோ என்
அழைப்பு மட்டும்
எட்டவே இல்லை...
அவளின் அழைப்புக்காக
அவளின் அதிகாரக் அன்பு குரலுக்காக
கைபேசியும் நானும்
நீண்டநேரம்
அயல் நாட்டில் காத்திருக்கிறோம்...
தேவதையின் குரல்
மீண்டும் கேட்குமோ...
விசித்திரக்கவி
Comments
Post a Comment
வாசகனும் வாசகியும் தருகிற கருத்து என்னும் மூச்சிக் காற்றில் தான் இந்த படைப்புகள் சுவாசிக்கும் ...
உங்கள் கருத்துகள் மூலம் உயர் கொடுங்கள் ...